ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள பஜார் பகுதி காலை, மாலை என இரு வேளைகளிலும் பரபரப்பான பகுதியாகும். இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஊத்துக்கோட்டை அருகே மதனஞ்சேரி பகுதியில் தனியார் சிவப்பு மண் குவாரி கடந்த சில நாட்களாக இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு சென்னை பெரியபாளையம், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் செம்மண் ஏற்றி வருகின்றனர்.

இதனால் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஆந்திர மாநிலம் மதனஞ்சேரியில் இருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயின்ட்டுக்கு வந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக தொடர் வரிசையாக செல்கின்றன. இதனால் கால்வாய் உடைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட கிருஷ்ணா கால்வாய் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயில் லாரிகள் செல்வதை தடுத்து நிறுத்தி தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.