2025-ம் ஆண்டுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. குரூப்-1 தேர்வு, குரூப்-4 தேர்வு, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு உட்பட மொத்தம் 7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இதில் உள்ளன. அதன்படி, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை ஏப்., 1-ம் தேதியும், ஏராளமானோர் பங்கேற்கும் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பையும், ஏப்., 25-ல் வெளியிட வேண்டும்.
வழக்கமாக, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடும் போது, காலியிடங்களின் எண்ணிக்கையும் தோராயமாக அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் கூறியதாவது:- TNPSC வெளியிட்டுள்ள வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் அறிவிக்கப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அதன்படி குரூப்-1 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். மார்ச் மாத இறுதிக்குள் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பெறப்படும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதும், காலியிடங்கள் குறித்த முழு விவரம் அதில் குறிப்பிடப்படும். தேர்வர்களின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும்.
எனவே, தேர்வர்கள் எந்த சந்தேகமும் குழப்பமும் இல்லாமல் மிக எளிதாக விடைத்தாள் பக்கத்தை நிரப்ப முடியும். தேர்வர்கள் எளிதாக விடையளிக்கும் வகையில் விடைத்தாள் நடைமுறை வடிவமைக்கப்படும். TNPSC தேர்வு முடிவுகளை விரைவாகவும், சிறு தவறு கூட இல்லாமல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. உதவி சுற்றுலா அலுவலர், உதவி பொறியாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான (நேர்காணல் இன்றி) மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் பிப்ரவரி 20-ல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதேபோல் குரூப்-1-சி தேர்வின் கீழ் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதற்கட்ட தேர்வு முடிவை உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிட முடியவில்லை. தேர்வு முடிவுகளை வெளியிட சட்டப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.