ராமேஸ்வரம் / சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளில் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே கென்னடியின் மோட்டார் படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் சங்கர், அர்ஜூனன், தர்மா முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், மீனவர்கள் ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் பிரதிநிதி பிரான்சிஸ் தலைமையில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 148 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, செயல்தலைவர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 2025-ம் ஆண்டு 3 மாதங்களுக்குள் 10-வது முறையாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பாரம்பரிய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க பலமுறை தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுபோன்ற கவலைக்கிடமான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மீனவர்கள் மீன்பிடி தொழிலையே பெரிதும் நம்பி வாழ்கின்றனர். இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்கள் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன. எனவே, தமிழக மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் தூதரக ரீதியாக வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.