தஞ்சாவூர்: குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் மும்முரமாக தயாராகும் நிலையில் நெல்லை தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து எவ்வாறு பயிர்களை காப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறுவை சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தங்களின் வயல்களை தயார்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் நெல்லில் தோன்றும் நோய்களும், தடுப்பு முறைகள் குறித்தும், எந்த நோயை எதிர்கொள்ள தொழில்நுட்பம் துணை நிற்கும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. பல்வேறு விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நெல் உற்பத்தி பெருகி உள்ள நிலையில் நெல்லில் பரவலாக பல நோய்களும் தோன்றி சேதத்தை ஏற்படுத்துகிறது. நெற்பயிரைத் தாக்கும் நோய்களில் பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் ஆகியவை முக்கியமானதாகும்.
குலை நோய் விதையில் தொடங்கி நாற்றங்கால் நடவு வயல் என பல்வேறு நிலைகளில் தோன்றி கதிர் வரும் நிலை வரை தாக்குகிறது. நோயின் அறிகுறிகள் இலை, கதிரின் கழுத்துப் பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஆரம்ப நிலையில் சிறிய ஊதா கலந்த பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றி பின்பு நீள வடிவத்தில் சாம்பல் நிற மையத்தையும், பழுப்பு நிற ஓரத்தையும் கொண்ட பெரிய புள்ளிகளாக மாறும். நோய் வளர்ச்சி அடைந்த நிலையில் காய்ந்து விடுகிறது. நெல் வயல் எரிந்து போனது போல் தோற்றமளிக்கும். நோயால் பாதிக்கப்பட்ட கதிரின் கழுத்துப் பகுதி உடைந்து விடும்.
தழைச்சத்து உரமான யூரியாவை பரிந்துரைப்படி இடுவதன் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். மேலும் எதிர்ப்பு திறன் கொண்ட கோ 47, கோ 52, ஓரளவு எதிர்ப்பு திறன் கொண்ட கோ 50, கோ 51 ரகங்களை நடவு செய்யலாம். இந்த நோயை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்பண்டசிம் 50% டபிள்யூ பி. 200 கிராம் அல்லது ட்ரை சைக்ளோசோல் 75% டபிள்யூ பி. 200 கிராம் அல்லது மெட்டாமினஸ்ரோபின் 20% இ.சி., 200 மில்லி லிட்டர் அல்லது அசாக்சிஸ்ரோபின் 25% எஸ்.சி., 200 மில்லி லிட்டர் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
இலை உறை கருகல் நோய் பயிர் தூர்விடும் பருவத்தில் இருந்து கதிர் வரும் பருவம் வரை தாக்குகிறது. முதலில் இந்நோய் தண்ணீருக்கு அருகில் உள்ள இலைகளில் தண்டு பகுதிகளில் காணப்படும். பிறகு நீள வட்ட வடிவ பச்சை கலந்த பழுப்பு நிறப் புள்ளிகளாக மாறும். இப்புள்ளிகள் பெரிதாகி சாம்பல் நிற மையப் பகுதிகளையும், பழுப்பு நிற ஓரப்பகுதிகளை கொண்டு இருக்கும். பின்னர் இப்புள்ளிகள் இணைந்து மேல் நோக்கிப் பரவி உறைகளுக்குள் நோயை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த கார்பண்டசிம் ஏக்கருக்கு 200 கிராம், மெட்டாமினஸ்ரோபின் 200 மில்லி லிட்டர் அல்லது ஹெக்ஸாகோணசோல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கிராம் வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தானியம் நிறம் மாறல் நோய் அனைத்து ரக நெல்லையும் தாக்குகிறது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட பூஞ்சாணத்தினால் ஏற்படுகிறது. கதிர் முற்றும் தருணத்தில் நோய் தீவிரம் அடைந்து தானியம் கருமை அடைவதால் நெல்லின் தரம் குறைகிறது. இதனை கட்டுப்படுத்த கார்பண்டசிம் + திரம் + மாங்கோ செப் மருந்தினை 1: 1: 1 என்ற விகிதத்தில் 0.2 சதவிகிதத்தில் கலந்து 50 சத பூக்கள் தோன்றியவுடன் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பாக்டீரியல் இலை கருகல் நோய் இலையின் நுனிப்பகுதியில் ஈரக் கசிவுடன் கூடிய சிறு புள்ளிகளாக தோன்றி பின் இலை நீள, அகல வாக்கில் பெரிதாகி இலைகளின் ஓரங்களில் கீழ்நோக்கி மஞ்சள் நிற வளைவுடன் கூடிய பகுதியாக வளரும். பாதிக்கப்பட்ட இலைகளில் கூழ் போன்ற திவலைகள் இலையின் ஓரங்களில் காணப்படும். இந்நோயை 20 சத சாண கரைசல் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். இதனை 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்கலாம். நோயின் தாக்குதல் அதிகம் இருந்தால் காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபள்யூ.பி. மருந்து ஏக்கருக்கு 500 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நட்ட முப்பதாவது மற்றும் 45 ஆவது நாளில் தெளிக்கலாம்
மேலும் ஸ்டெப்ரோமைசின் சல்பேட் + டெட்ரா சைக்ளின் கலவையை ஏக்கருக்கு 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே நோயின் தீவிரத்தின் அடிப்படையில் சரியான மருந்துகளை தேர்வு செய்து சரியான விகிதத்தில் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிரில் நன்கு படும்படி தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.