மும்பை: பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த துபாய் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக துபாயைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை காலை ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்கு அந்தப் பெண் வந்து, அவருக்கு உடைகள் மற்றும் பரிசுகளை வழங்க வந்ததாக கூறியுள்ளார்.
நடிகருடன் முன்கூட்டியே ஒரு சந்திப்பு இருப்பதாக அவர் கூறிய பிறகு, வீட்டுப் பணிப்பெண் அப்பெண்ணை உள்ளே அனுமதித்தார். வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு வந்த பிறகு, ஊழியர்கள் அந்தப் பெண்ணின் வருகை குறித்து அவருக்குத் தெரிவித்தனர். இருப்பினும், அப்பெண் யார் என்று தனக்குத் தெரியாது என்று கபூர் கூறியுள்ளார்.
இதனால் எச்சரிக்கை அடைந்த வீட்டு ஊழியர்கள், அவர் ஆதித்யாவை நெருங்க முயன்றபோது அவரைத் தடுத்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரின் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மும்பையில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் வீடுகளுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.