சென்னை: அந்த காட்சிதாங்க பின்னடைவு… சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த கடைசி படமான சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகா மிகவும் எமோஷ்னலாக நடித்த ஒரு காட்சி படத்திற்கு பின்னடைவாக அமைந்தாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா – ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்பு பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக கணவன் மனைவியாக நடித்த படம் சில்லுனு ஒரு காதல். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா – ஜோதிகாவுடன், பூமிகா, சந்தானம், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.
கல்லூரி காலத்தில் காதலில் விழுந்த நாயகன், அந்த காதல் தோல்விக்கு பிறகு, வீட்டில் பார்க்கும் பெண்னை திருமணம் செய்துகொள்கிறான். குழந்தையும் பிறக்கிறது. இதற்கிடையில், அவனது முன்னாள் காதல் குறித்து மனைவிக்கு தெரியவருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதை தான் இந்த படத்தின் கதைக்களம். காதலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக முன்பே வா என் அன்பே வா பாடல் இன்றைக்கும் காதலர்களின் முக்கிய ரிங்டோனாக இருக்கிறது. இந்த படத்தின் கௌதமின் (சூர்யா) முன்னாள் காதல் குறித்து தெரிந்துகொண்ட குந்தவை (ஜோதிகா), தனது கணவரையும் அவரின் முன்னாள் காதலியையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்வார். அதன்படி ஒருநாள் திடீரென ஐஸ்வர்யாவை (பூமிகா) வீட்டுக்கு அழைத்து வருவார். இதை பற்றி தெரியாத கௌதம், குந்தவையிடம் ஐஸ்வர்யா பற்றி சொல்ல, தயங்க, நான் தான் அவரை வர சொன்னேன் என்று இவரே ஷாக் கொடுப்பார்.
நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன், எனக்கு பிடித்ததை செய்வேன். நீ மனம் திறந்து பேசு என்று சொல்லிவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றுவிடுவாள் குந்தவை. இந்த காட்சியில் நடித்த ஜோதிகா, உண்மையாகவே எமோஷ்னலாகி அழுது நடித்து முடித்துள்ளார். இவர் நடித்தவுடன் அங்கிருந்த அனைவரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவரது நடிப்பில் திருப்தி இல்லாத இயக்குனர் கிருஷ்ணா, மீண்டும் ஒரு டேக் எடுக்கலாம் என்று ஜோதிகாவிடம் சொல்ல, அவரோ ஏன் என்னாச்சு என்று கேட்க, இயக்குனர் விளக்கமாக கூறியுள்ளார்.
கணவரின் முன்னாள் காதலியை அழைத்து வந்து மனம் திறந்து பேசு என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே வீட்டை விட்டு போனால் அவன் எப்படி நிம்மதியாக பேசுவான்? இந்த காட்சியை அப்படியே மாற்றி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். ஜோதிகாவும் இதை கேட்டு, அடுத்த டேக்கிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கும்போது ஜோதிகா நடித்த முதல் காட்சியையே வைத்துள்ளனர். இது பற்றி இயக்குனர் கேட்டபோது அனைவருக்கும் இதுதான் பிடித்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இதை கேட்ட இயக்குனர் கிருஷ்ணா, பலரிடம் படத்தை போட்டு காட்ட, அந்த காட்சி தான் வேண்டும் என்று அவர்களும் கூறியுள்ளனர். ஆனால் படம் வெளியானபோது இந்த காட்சி நெருடலாகவே இருந்துள்ளனர். ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பதை கிருஷ்ணா உணர்ந்துள்ளார். அப்போது தான் தவறு செய்ததை உணர்ந்ததாகவும், ஒரு இயக்குனராக எந்த காட்சியைளயும் மாற்றாமல் அப்படியே எடுக்க வேண்டும் அப்போது தான் படம் முழுமையாக வரும் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.