சிக்கனை வைத்து பல வகையான உணவுகளை நாம் சமைத்து இருப்போம். ஆனால் அரைத்து மசாலா சேர்த்துச் சமைக்கும் சிக்கன் குழம்பின் சுவை மட்டும் தனி வகை. இன்று அந்த அருமையான குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
முதலில் ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை நன்கு வறுக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தேங்காயை சேர்த்து வறுத்தபின், அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கி, அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் பேஸ்டாக அரைக்க வேண்டும்.

இப்போது மற்றொரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவி வைத்த சிக்கனை அதில் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பும் சேர்க்க வேண்டும்.
இதனுடன், முன் தயாரித்து வைத்துள்ள மசாலா பேஸ்டை சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் மிதமான தீயிலும், பின் 15 நிமிடம் லோ ஃபிளேமிலும் வேகவைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து குழம்பு தேங்கியதும், கடைசியாக கறிவேப்பிலை, கரம் மசாலா மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் விட்டுக்கொள்ள வேண்டும்.
சூடாக பரிமாற சுவையாக இருக்கும் அரைத்து மசாலா சிக்கன் குழம்பு ரெடி. சாதத்தோடு, இடியாப்பத்தோடு, சப்பாத்தியோடு மிகச்சிறந்த சேர்க்கையாக இருக்கும்.