அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி
அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுவதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் 16வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்தப் போட்டியைக் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால், மாலையில் இருந்து மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி ஓவர்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்தது. இதனால் போட்டியை இரவு 11 மணிக்கு ஒத்திவைப்பதாக நடுவர்கள் அறிவித்தனர்.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் நாளான இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே வாங்கப்பட்ட டிக்கெட்டுகளை பயன்படுத்தி இந்த போட்டியை நேரில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், போட்டி தொடங்கும் முன் அகமதாபாத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று மழை பெய்து போட்டியை நடத்த முடியாத பட்சத்தில் இதுவரை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கே கோப்பை வழங்கப்படும் என்பது ஐபிஎல் விதி. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.