கர்நாடக சட்டமன்ற தேர்தல் | மே 10 வாக்குப்பதிவு; மே 13 வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
கர்நாடக தேர்தல்: சில முக்கிய தேதிகள்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் 9.17 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏப்ரல் 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. 3 கட்சிகளும் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டு வருகின்றன. மஜதத், ஆம் ஆத்மி மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. எனினும், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.