அத்துமீறிய அமெரிக்க விமானம்… விரட்டி அடித்ததாக வடகொரியா தகவல்
பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் நீடிக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
வடகொரியாவின் அத்துமீறலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் வடகொரியா அடங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தங்களது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. போர் விமானங்கள் மூலம் அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை விரட்டியடித்ததாகவும் வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாடு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக வடகொரியா கூறிய இந்த குற்றச்சாட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வடகொரியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென் கொரிய அதிபர் மற்றும் ஜப்பான் பிரதமரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விரைவில் சந்திக்க உள்ளார். தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கள்கிழமை முதல் 11 நாள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.