கர்நாடகா: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் பா.ஜ.க எம்.பி சுதாகர் , இவரது மனைவி பிரீத்தி. பெங்களூரில் வசிக்கும் பிரீத்தியின் , மொபைல் போன் எண்ணுக்கு கடந்த மாதம் 26 – ம் தேதி அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்நபர் , தன்னை மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி சபத் கான் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உங்களது கிரெடிட் கார்டு மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதனால் நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார். இதை கேட்டு பிரீத்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நான் கூறும் வங்கிக் கணக்கிற்கு , 14 லட்சம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும். அந்த பணத்தை வெரிபிகேஷன் முடிந்த 45 நிமிடங்களுக்குள் திருப்பி அனுப்பி விடுவோம் என கூறியுள்ளார். இதன்படி 14 லட்சம் ரூபாயை பிரீத்தி அனுப்பினார். அதன் பின் இணைப்பை அந்த நபர் துண்டித்து விட்டார். அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரீத்தி, உடனடியாக 1930 எண்ணை தொடர்பு கொண்டு, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். துரிதமாக செயல்பட்ட பெங்களூரு மேற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைபர் திருடர்களின் வங்கி கணக்கை முடக்கினர். பின், அந்த வங்கிக் கணக்கிலிருந்து, 14 லட்சம் ரூபாயை மீட்டனர்.
இது குறித்து பெங்களூர் மேற்கு பிரிவு போலீசார் கூறியதாவது ;
சைபர் மோசடி நடந்து முடிந்த முதல் 1 மணி நேரத்தை Golden Hour என்று அழைக்கிறோம். அதே போல் , சைபர் மோசடி நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பிரீத்தி புகார் அளித்தார். சைபர் திருடர்களின் வங்கிக் கணக்கை போலீசார் முடக்கினர். பின் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 3 – ம் தேதி பணம் மீட்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் பணம் மீட்கப்பட்டு , அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர்கள் கூறினர்.