புதுடில்லி: எல்லை பாதுகாப்பு தீவிரம்… மேற்கு வங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க அரசு, ஆட்சிக்கு வந்த ஏழு நாட்களுக்குள் 600 ஹெக்டேர் நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஒப்படைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக இந்த நிலப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், இது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, சிக்கன்ஸ் நெக் வழித்தடத்தில் உள்ள மேலும் 121 ஹெக்டேர் நிலத்தையும் வங்காள அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட அரசியல் தலைமை மாற்றமே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கங்கை நதியின் முழுப் பாதையிலும் தற்போது பா.ஜ.க வலுவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பா.ஜ.க அரசு அமைத்த தடுப்பு முகாம்களின் காரணமாக சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் தாங்களாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில் தினசரி ஊடுருவல் நடந்ததாகவும், தற்போது அந்த நிலைமையே தலைகீழாக மாறியுள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.