அசாம்: வெள்ளத்தால் 19 பேர் பலி… வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
அசாம் மாநிலத்திலுள்ள 9 முக்கிய ஆறுகளும் அபாய கட்டத்தைத் தாண்டி நிரம்பியுள்ளதாகவும்; அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 6.8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அசாமின் சில இடங்களில் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையுடன், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், நாகோன் மற்றும் கச்சார் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து தற்போது 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அம்மாநிலத்தில் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் சுமார் 41,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 190 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள பல்வேறு முக்கிய சாலைகள், பாலங்கள், கல்வி நிறுவனங்கள், மின்சார அமைப்புகள், ரயில் சேவைகள் ஆகியவை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.