சென்னை: மதுரை சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் ஒரு மாணவன் கொடூரமாக உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கிறது.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் சமூகத்தில் அமைதியும் மனிதநேயமும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை விரைந்து கைது செய்து, உரிய விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.