சென்னை: மாநிலங்களவை 2 சீட் யாருக்கு? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதன்படி தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு இடம், மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது. எனவே இந்த முறை வைகோவிற்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை.
மேலும் அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்கள் யார்? என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும், முன்பு கூட்டணியில் இருந்த பா.ம.க.வும் தங்களுக்கு ஒரு எம்.பி. ‘சீட்’ வேண்டும் என்று அ.தி.மு.க.விற்கு நெருக்கடி தருகின்றனர்.
அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து இருந்த போது தே.மு.தி.க. தான் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தது. அப்போது தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. வழங்குவதாக பேசப்பட்டது என்றும், அதன்படி தங்களுக்கு ஒரு எம்.பி. பதவி தரவேண்டும் என்று தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா கூறி வருகிறார். ஆனால் அதனை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறி விட்டார்.
மேலும் தற்போதைய நிலையில் அ.தி.மு.க.விற்கு 62, ஒ.பன்னீர் செல்வம் அணியில் 4 பேர் என மொத்தம் 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மூலம் அ.தி.மு.க.விற்கு ஒரு எம்.பி. உறுதியாக கிடைக்கும். மற்றொரு எம்.பி. வேண்டும் என்றால் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால், அவர்களது 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கும். எனவே இரண்டாவது எம்.பி.யும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அந்த அடிப்படையில் பா.ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாசுக்கு ஒரு எம்.பி. பதவி கொடுத்து அவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்று கூறுகிறது.
ஆனால் இந்த 2 கட்சிக்கும் எம்.பி. சீட்டு தர வேண்டாம் என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரிடம் பகையாக அவர் விரும்பவில்லை. அதே நேரம் 2 இடங்களுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தினாலும், அது யார் என்பதும் அ.தி.மு.க.வில் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் சொல்லப்படுகிறது. இதனாலும் இந்த விஷயத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக இன்று 41 மாவட்ட செயலாளர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலங்களவை 2 சீட் யாருக்கு வழங்கலாம், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் களமிறங்கப்போவது யார்? பேரவை தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின், உதயநிதிக்கு எதிரான விமர்சனங்களை மக்களிடம் கொண்டு செல்ல நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விஜய் தொடர்பாக பேச அதிமுக-வினருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவோடு திமுகவை தொடர்புபடுத்தும் வகையிலான கதையாடலை கொண்டுள்ள அதிமுக வியூகம் வகுத்துள்ளதாகவும் அதிமுக நிச்சயம் மெகா கூட்டணி அமைக்கும். நம்பிக்கையோடு செயலாற்றுங்கள் என்று பழனிசாமி பேசியதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.