பெங்களூரு: கர்நாடகாவில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக பா.ஜ.க. சார்பில் பகல்-இரவு தர்ணா போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலை தொடங்கியது. கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா கலந்து கொண்டார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.