சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையதாக கண்டறியப்பட்ட நடிகரும், பாஜக அரசியல் செயற்குழு உறுப்பினருமான ஆர். கே. சுரேஷின் 8 வங்கி கணக்குகளை முடக்கியதற்காக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 2,400 கோடி ரூபாயை 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து மோசடியாக சேகரித்ததாக ஆருத்ரா நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், தொடர்ந்த விசாரணையில் நடிகர் ஆர். கே. சுரேஷின் பெயரும் வெளிவந்தது. இதையடுத்து அவருடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த முடக்க நடவடிக்கையை எதிர்த்து அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த ஜனவரி மாதம், 8 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்யும் நிபந்தனையுடன் வங்கி கணக்குகள் மீதான முடக்கத்தை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் அந்தத் தொகையை செலுத்திய பிறகு, போலீசார் தீர்மானம் அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, போலீசாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆர். கே. சுரேஷ் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில், வங்கி கணக்குகள் முடக்கம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே நீக்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீசார் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் தாமதம் செய்ததை சுட்டிக்காட்டியபோதும், அவமதிப்பு என்பது ஏற்பட்டதாக கருத முடியாது எனத் தீர்மானித்தார். மேலும், கணக்கு முடக்க நீக்கம் மேற்கொள்ளப்பட்ட காலம், மேல் முறையீடு செய்யக் கூடிய காலக்கெடுவுக்குள் இருப்பதாலேயே இது அவமதிப்பாக வராது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதனால், ஆர். கே. சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற உத்தரவை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டது.