சென்னை: நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள்.
அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது.
சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும்.
ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் ஏற்படுத்திவிடும்.