தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி, மனோரா கடற்கரையில் கடல் பசு பாதுகாப்பு மையத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பேராவூரணி அடுத்த மனோராவில், TN-SHORE திட்டத்தின் கீழ் ரூபாய் 40.94 கோடி மதிப்பீட்டில், உலகத் தரத்தில், இந்தியாவின் முதல் சர்வதேச கடல்பசு பாதுகாப்பு மையம் கட்டுவதற்கு கடந்த 17.02. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடுகளுக்காக ரூபாய் 40.94 கோடி தொகை அனுமதிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக அளவில் கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் பாக் வளைகுடா பகுதிகளில் காணப்படுகிறது. இந்த சுற்றுச்சூழலினை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனோரா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்சி வன மண்டலம், வனப் பாதுகாவலர் காஞ்சனா தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடல் பசு பாதுகாப்பு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் நே.பிரவீன், வனவர் ஆர்.ராஜ்குமார், ரதி பாரதி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், மல்லிப்பட்டினம் லைட் ஹவுஸ் இன்சார்ஜ் குகானந்தம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆர்கிடெக்ட் ரமேஷ் பாபு, ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் பாலாஜி, மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ஜே.பியூலா, கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ஏ.ஜெயபால், செய்யது, ஹபீப் முகமது, சண்முகம், சின்னையன், பத்மநாதன், தாமரை மற்றும் கிராம மக்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.