தஞ்சாவூர்: தஞ்சை அருகே நிதி நிறுவன உரிமையாளரை வழிமறித்து பத்தரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே குளிச்சப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் அருண் ஆதவன் (23). இவர் தஞ்சையை அடுத்த கோவிலூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அருண் ஆதவன் கடந்த 9ம் தேதி இரவு குளிச்சப்பட்டு சாலையில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் வந்துள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டுக்கோட்டை – மன்னார்குடி பிரிவு சாலை அருகே அருண் ஆதவன் வந்தபோது அதே வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அருண் ஆதவனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அருண் ஆதவனை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த பத்தரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அருண் ஆதவன் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.