இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் நாளை முதல் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள், ராணுவ நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைக்காக என்டிஏ ஆல் NEET நடத்தப்படுகிறது.

அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய என்டிஏ தற்போது அவகாசம் அளித்துள்ளது. அதன்படி, மார்ச் 9 முதல் 11-ம் தேதி வரை neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் திருத்தம் செய்யலாம்.
இது பற்றிய கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.