உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாட்டுக்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை காரத்தொழுவு மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணியூர் போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பஸ் வசதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.