தென்காசி: தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்த இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு பெண் அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் ஸ்ரீபத்மாவதி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதற்காக கீரை கட்டு கொள்முதல் செய்ததில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரூ.25 ரூபாய் மதிக்கத்தக்க ஒரு கிலோ கீரை கட்டை 80 ரூபாய்க்கு வாங்கி ஸ்ரீ பத்மாவதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார்.
அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டை ரூ.80 வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி என்.ஓ.சி. கொடுத்த நிலையில், இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி மாற்றம் செய்து தனது பணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனைக்கு கேட்டபோது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர், ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.
பத்மாவதி இன்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.