சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15-ல் இருந்து 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. 85 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டசபை தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒத்துப்போவதில்லை.
இதனால், பல்வேறு நிர்வாக பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலைப் பட்டியல், சாலை அடர்த்தி, வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாக எல்லைகளை மாற்ற அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, தற்போது 15 மண்டலங்களாக உள்ள மண்டலங்களை 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு உத்தரவின்படி, மண்டல அங்கீகாரத்தை இழக்கும் மணலி மண்டல மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த அரசாணையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ”தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் பதவி காலத்தில் மண்டலங்களில் மாற்றம் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 2022-ல் தொடங்கி 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும்.
அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை மண்டலங்களில் மாற்றங்களைச் செய்ய முடியாது. அதனால், அரசு உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அரசு உத்தரவு அமலுக்கு வர வாய்ப்புள்ளது’’ என்றார்.