வேலூர்: வேலூர் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் 2017-ல் துவங்கியது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2018-ல் பணிகள் துவங்கி முடிக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. விமான நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூர் விமான நிலையத்தில் 850 மீட்டர் நீள ஓடுபாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் டவர், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்றவற்றின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதற்கிடையில், விமானங்களை இயக்குவதற்கான சமிக்ஞை பரிமாற்றத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து தெற்கு மண்டல விமான பாதுகாப்பு துறை துணை பொது மேலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வேலூர் விமான நிலையத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதனால், விரைவில் விமானங்களை இயக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் இருந்து வந்த இந்திய விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் வேலூர் விமான நிலையத்தில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிந்து டெல்லி சென்றனர். இதையடுத்து, கடந்த செப்டம்பரில் வேலூர் விமான நிலையத்தில் நடந்த ஆய்வின்போது, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கம்பி வேலியை அகற்றி, கற்களால் சுற்றுச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை, விமான போக்குவரத்து ஆணைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் அளித்தனர்.
சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் விமான நிலையத்தை சுற்றியுள்ள கம்பி வேலிக்கு பதிலாக கற்களால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் விமான போக்குவரத்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.