தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசனின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். இதில் அவர் ‘புரட்சிக் கவிஞரின் புது உலகம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
மற்றவர்களுக்கும் பாரதிதாசனுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. சோலையை ஒரு கவிஞன் பார்க்கிறான் என்றால், பூக்கள், அசைகின்ற இலைகள், பச்சை வண்ணம், பறவைகளின் கீதம், காதலியுடன் வருவது போன்ற கற்பனைகள் தோன்றும். ஆனால், பாவேந்தர் பாரதிதாசனுக்கு ஒரு சோலையை பார்த்தவுடன் அதை நிர்மாணித்த தொழிலாளி ஞாபகத்துக்கு வருவான். இதுதான் மானுடம்; இதுதான் தேசம்; இதுதான் சமூக சமத்துவம்.
மாணவர்கள் பாவேந்தரைப் படிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், ஒரு வகுப்பு, பாரதிதாசன் வகுப்பாக பேராசிரியர்கள் நடத்த வேண்டும். 10 மாணவர்கள், 10 பாடல்கள் பாடுவர்; வாசித்துக் காட்டுவர். அதை 100 மாணவர்கள் செவிமடுப்பர். பாரதிதாசன் பாடலை சமூகப்படுத்துவதற்கு இதுதான் வழி. இப்படிப் பாவேந்தரை மக்கள் மயப்படுத்த வேண்டும். காலத்தின் நீட்சியுடன் பாவேந்தரைக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவுக்கு நிறுவன வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார். நிறுவனத் துணைவேந்தர் வெ. ராமச்சந்திரன், பதிவாளர் பி.கே. ஸ்ரீவித்யா, செயற்குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறுகையில், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தால் என்ற கேள்விக்குறியை விட அமையப் போகிறது என்று நம்பிக்கையுடன் சொல்லுங்கள். அப்படி சொன்னால் நாங்களும் மகிழ்ச்சி அடைவோம், வாக்குப்பதிவு நடைபெற்ற மறுநாள் அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தினேன்.
பொன்னாடையை விரித்துக்கொண்டே நான் சொன்ன சொல் இப்போதும் என் நாவிலும், செவியிலும் இருக்கின்றன. அப்போது ‘உங்கள் உழைப்பும் சாதனையும் உங்கள் கனவை நனவாக்கும்’ என்று கூறினேன். அந்த கனவு நனவாகும் சூழல் உள்ளது. வருகிற 4-ந் தேதி அது உறுதியாகும் என்று நம்புகிறோம். திராவிட மாடல் ஆட்சி நீளும். நீடித்தால், அவர் விட்ட இடத்தில் இருந்து, தொட்ட இடத்தில் இருந்து புதிய சாதனைகளை தொடர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ்நாட்டு தாய்மார்கள் தங்கள் நன்றியை காண்பிப்பவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.