கடலூர்: வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 857 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்த வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு இந்த ஏரி நிரப்ப்படும். மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். கோடை வெயில் மற்றும் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் 43.10 அடியாக சரிந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.65 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் 9 அடி நீர் மட்டம் உள்ள கீழணையில் தற்போது 3.6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.