கடலூர்: கடலில் 5 நாட்களாக தத்தளித்து வரும் எருமை மாட்டை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் 32 மாடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடலூர் தாழங்குடா பகுதியில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் எருமை மாடு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
மாட்டை மீட்க முயன்றால் சிறிய படகு கவிழ்ந்து விடும் என்பதால் அந்த முயற்சியை எடுக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முகத்துவாரம் பகுதியில் இரை மேய்ந்துக் கொண்டிருந்த 32 எருமைகள் கடந்த 4 ஆம் தேதி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.