ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்… ஈரானிய நபர் கைது
பெர்லின்,
ஜெர்மனியில் டார்ட்மண்ட் அருகே உள்ள காஸ்ட்ரோப்-ராக்செல் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், அந்த நபர் சயனைடு, ரிசின் உள்ளிட்ட நச்சுப் பொருட்களை வாங்கியது தெரியவந்தது. ஈரானைச் சேர்ந்த 32 வயதான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் அவரது வீட்டை தங்கள் எல்லைக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஈரானிய நபரின் வீட்டை பல்வேறு அதிகாரிகள் மற்றும் அவசரகால பணியாளர்கள் பாதுகாப்பு உடைகள் அணிந்து சோதனையிட்டனர். இது குறித்து டஸ்செல்டார்ப் காவல் துறை, ரெக்லிங்ஹாசென் காவல் துறை மற்றும் முன்ஸ்டர் காவல்துறை இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நீதிபதி உத்தரவின் பேரில் சோதனை நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் தீவிர வன்முறைச் செயலுக்குத் தயாராகிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சயனைடு, ரிசின் போன்ற பொருட்களை வாங்குவது இஸ்லாமியர்களால் தூண்டப்பட்ட தாக்குதலை நாட்டில் நடத்தும் அபாயம் உள்ளது. குற்றவாளிகளுடன் மேலும் ஒருவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கைது உத்தரவுக்கு நீதிபதியின் உத்தரவு கிடைத்ததும் முடிவு எடுக்கப்படும். விசாரணை நடைபெற்று வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.