கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? தூத்துக்குடியில் தொல்.திருமாவளவன் கேள்வி
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்.காரர் போல் நடந்து கொள்கிறார். அவர் ராஜினாமா செய்து RS கடமைகளை ஏற்கலாம். அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வித்தியாசமான கருத்துக்களை கூறி வருகிறார்.
தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் கவர்னராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. இப்படிபட்ட ஒருவர் சட்டப்பேரவையில் நாளை உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தம். திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மனித மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். அவர்களை கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.