சென்னை : இலங்கை அரசு விடுவித்த 13 தமிழக மீனவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை தங்களுடைய பாதுகாப்பில் வைத்து, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 13 மீனவர்களையும் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தடைந்தனர்.
அவர்கள் 13 பேரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இலங்கை கடற்படையினர் சுட்டதில் காலில் குண்டு காயமடைந்த காரைக்கால் மீனவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.