கர்நாடகாவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரபி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், வேனுக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் டிரைவர் மற்றும் அவருடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சஞ்சய்ராஜ் (வயது 30), தாளவாடியை சேர்ந்த பயஸ் பாஷா (30), கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த மூபிஸ் (20) என்பதும், சாம்ராஜ் நகரில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 2½ லட்சம் மதிப்புள்ள 412 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முசாயிதீன் என்பவரை தேடி வருகின்றனர்.