எந்த பாலினமாக இருந்தாலும் ஒப்புதலுடன் உறவு கொண்டால் கிரிமினல் குற்றமல்ல… ஐ.நா அறிக்கை
ஐநா: தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட எல்ஜிபிடிகு சமூகத்தினர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. வழக்கின் வாதங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வுகளில் பாலுறவு தொடர்பான சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரு தரப்பினரும் ஒருமித்த உடலுறவில் ஈடுபடும்போது, அது கிரிமினல் குற்றமாகாது.
அந்த உறவு பால், பாலினம், பாலியல் சார்பு என எந்த விதத்தில் இருந்தாலும் அது ஒருமித்த கருத்துடன் இருக்கும் போது அது கிரிமினல் குற்றம் அல்ல. எனவே, திருமணத்தின் மூலமாகவோ, திருமணத்திற்கு முன்னரோ, திருமணத்திற்கு பின்போ மாறுபட்ட பாலியல் உறவில் இருந்தாலும் அது ஒருமித்த கருத்துடன் இருக்கும் போதும் கிரிமினல் குற்றமல்ல என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒரே பாலினத்தவர் திருமணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஐ.நா அறிக்கை கவனம் பெற்றுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்படி அனுமதி வழங்குவதில் மாநில அரசுகளின் கருத்துகளை முதலில் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 10 நாட்களுக்குள் மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.