திருத்தணி முருகன் கோவிலில் நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர்,
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் தேவைக்காக டீ, டிபன், கூல் ரிங்ஸ், மாலை கடை, பேன்சி ஸ்டோர் போன்ற கடைகள் கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் இயங்கி வருகின்றன.
பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் கேஸ் ஸ்டவ், கூல்டிரிங்க்ஸ் ஃபிரிட்ஜ், டேபிள், சேர் ஆகியவற்றை போட்டு வைத்திருப்பதால் நடந்து செல்ல சிரமமாக இருப்பதாக பக்தர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கடை உரிமையாளர்களிடம் பல முறை அறிவுறுத்தியும் அதனை அவர்கள் அதை கடைபிடிக்கவில்லை என தெரிகிறது.
எனவே கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் அதிரடியாக பக்தர்கள் நடந்து செல்லும் வழியை ஆக்கிரமித்து வைத்திருந்த கேஸ் ஸ்டவ், டேபிள், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து டிரக்டரில் ஏற்றிச் சென்றனர். நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என கோவில் துணை ஆணையர் விஜயா எச்சரித்தார். இதனால் திருத்தணி மலைக்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.