வங்கதேசம் : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசும், அதேபோல இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பு குறித்து விவாதிக்கத் தொடங்க வேண்டும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.