லாகூர்: 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் இருந்த ஹபீஸ் சயீத், தற்போது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தண்டனை எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்புகளின் தலைவரான அவர், பயங்கரவாத நிதி வழக்குகளில் 2019ல் கைது செய்யப்பட்டார்.
அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவர் சிறையில் இல்லாமல் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் வசதியான வாழ்க்கை வாழ்கிறார் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சயீத், அதை ரத்து செய்ய கோரி தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதிகள் ஷாபாஸ் ரிஸ்வி மற்றும் தாரிக் மஹ்மூத் பஜ்வா இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது. 2008ம் ஆண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் வெளிநாட்டு குடிமக்கள் பலர் இருந்தனர். சயீத் மீது ஐ.நா. அமைப்பு உள்பட பல நாடுகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அவரது மீதான வழக்குகள் பாகிஸ்தானில் பலமுறை தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது, இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளுக்குப் பின்னர், சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களது தண்டனைகளை ரத்து செய்ய கோரி முறையிட்டுள்ளனர்.இந்த விவகாரம் சர்வதேச மட்டத்தில் மீண்டும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.