சண்டிகர்: பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகளுக்கும், அங்கு உள்ள சில நபர்களுக்கும் இந்திய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை பகிர்ந்ததற்காக ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இத்தகவல் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்து தகவல்களை அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நௌமன் இலாஹி என்பவர், 24 வயதாகும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். தற்போது ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அவருடைய மொபைல் போனை பரிசோதித்தனர். அதில், பாகிஸ்தான் சார்பாக செயல்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்து பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்து வந்தது உறுதியாகியது.
தனது செயல்கள் குறித்து நௌமன் இலாஹி முற்றிலும் ஒப்புக்கொண்டதாகவும், அவர் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியத் தகவல்களை பகிர்ந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகள் குறித்த பதட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹரியானா போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் நௌமன் இலாஹி கைது செய்யப்பட்டிருப்பது, பாகிஸ்தானின் உளவுத்துறைகள் இந்தியாவில் செயல்பட முயல்கின்றன என்பதற்கான உறுதியான சாட்சியாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் தொடர்பான எந்தவொரு செயலும் கண்டிப்பாகக் கையாளப்படும் என்று ஹரியானா போலீசார் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் மாநிலத்திலும் தேசிய அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இலாஹியின் கைதுடன் பாகிஸ்தான் சார்பான உளவு முயற்சிகள் மீண்டும் மையப்புள்ளியாகியுள்ளன.