காஷ்மீரின் பிரபலமான சுற்றுலாதலமான பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், அப்பகுதியைச் சேர்ந்த குதிரை ஓட்டியாளரைச் சேர்த்து 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததுடன், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதவாதத்தையும் மனிதாபிமானத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (TRF) பொறுப்பேற்றது. இதனையடுத்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாகா எல்லை மூடப்படும், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டுப் புறப்பட ஆணையிடப்படும், சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட விசா மூலம் இந்தியா வர தடை செய்யப்படும் மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
மேலும், பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியா விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்பட்டு, பல தசாப்தங்களாக அமலிலிருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தமும் இடைநிறுத்தப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கான அனைத்து வகை விசாக்களும் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வாகா எல்லையை மூடுவது, இந்தியர்களுக்கான சார்க் விசாக்களை ரத்து செய்தல், இந்திய இராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என அறிவித்தல், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை மறுத்தல், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசா ரத்து செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, இந்தியாவில் குடியுரிமை பெறும் நோக்கத்துடன் குறுகிய கால விசா மூலம் வந்துள்ள பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினரை குறிக்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதம், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் சிறிஸ்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை நீண்ட கால விசா வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இருநாட்டு நடவடிக்கைகள், இந்தியா – பாகிஸ்தான் உறவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, நிலவிய பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன.