ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது வீட்டுக் கடன்களின் உச்சபட்ச வட்டி விகிதத்தை 8.45 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக புதிய கடன் பெறுபவர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 7.50 சதவீதமாகத் தொடர்ந்து வைத்துள்ள நிலையில், உச்சபட்ச வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிபில் ஸ்கோர் குறைவாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி சுமை ஏற்படும்.
உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு 30 லட்சம் ரூபாய் கடனாக பெற்ற ஒருவர், முந்தைய 8.45 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் சுமார் 25,830 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டியிருந்தது. இதன் மூலம் அவர் மொத்தமாக 61.99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தி முடித்திருப்பார்.
ஆனால் தற்போது, அதே அளவிலான கடனை 8.70 சதவீத வட்டியில் பெறும் போது, மாதம் சுமார் 26,278 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டியுள்ளது. இதனால், கடன் காலம் முடிவில் மொத்தமாக 63.06 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்த மாற்றம் புதிய கடன் பெறுபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நிலையில், கடன் பெற விரும்புவோர் தங்கள் நிதி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.