கோவை: அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உறவினர் திருமணத்திற்காக சென்னை செல்கிறேன் என தெரிவித்தார்.
நீங்கள் கொடுத்த கெடு இரு தினங்களில் முடிய போகிறதே என்ற கேள்விக்கு, “எல்லாம் நன்மைக்கே” என செங்கோட்டையன் பதில் அளித்தார். மேலும் என்னை பொருத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும்.
வெற்றி என்ற இலக்கை, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி வழியில் சென்று ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை எனவும் தெரிவித்தார். சென்னை வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பீர்களா என்று கேள்விக்கு, இல்லை என பதில் அளித்தார். நான் உறவினர் திருமணத்திற்கு செல்கிறேன் என தெரிவித்தார்.
மீண்டும் டெல்லி செல்வீர்களா? என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என தெரிவித்த செங்கோட்டையன், அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் பதில் அளித்தார். செங்கோட்டையன் சென்னை சென்ற அதே பயணிகள் விமானத்தில் கோவையில் இருந்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் சென்னை சென்றார் என்பது குறிப்பிடதக்கது.