மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தி வட்டி விகிதங்கள் உள்ளிட்ட முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்திற்கான பணவியல் கொள்கை கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது 5.5 சதவீதமாகவே இருக்கும். பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் 2.6 சதவீதமாக இருக்கும். அமெரிக்க வரி உயர்வு பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

அதே நேரத்தில், ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படலாம். பங்குகளுக்கு எதிரான கடன்களுக்கான உச்சவரம்பு ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ஐபிஓவிற்கான தனிநபருக்கான கடன் வரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்படும். அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் இப்போது டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பெற முடியும்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். அடுத்த பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டம் டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.