சென்னை: தி.மு.க. அரசின் கொள்கைகளால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உழவர்கள், வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவார்கள் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“2023-ம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்து கொண்ட மராட்டியத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலமாக திகழ்வது தமிழ்நாடுதான். அனைத்துத் தரப்பு மக்களும் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதற்கு இதுதான் மோசமான சான்று ஆகும்.
தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 631 விவசாயிகள். அவர்களில் 564 பேர் வேளாண்மையை மட்டுமே தங்களின் ஒற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட கூலித்தொழிலாளர்கள் ஆவர். 43 பேர் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்பவர்களும், 24 பேர் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்களும் ஆவர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 40 பேர் பெண்கள் ஆவர். விவசாயிகள் தற்கொலைகளைப் பொறுத்தவரை மராட்டியம், கர்நாடகம், ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. உழவர்கள் வாழ வழியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதையே இது காட்டுகிறது.
அதற்கு முன் 2022-ம் ஆண்டில் 738 விவசாயிகளும், 2021-ம் ஆண்டில் 599 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உழவர்களின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் முதன்மையானது உழவர்களால் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததுதான்.
விவசாயிகளின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய வல்லுனர் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்தக் குழு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், இந்தியாவில் முழுக்க முழுக்க உழவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.27 மட்டும் தான் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை; கொள்முதல் விலை சொல்லிக் கொள்ளும்படியாக அதிகரிக்கவில்லை; அதனால் விவசாயிகள் படிப்படியாக கடன் வலையில் சிக்கி, இப்போது மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்டதாகவும் அக்குழு அதன் இடைக்கால அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.
கடன் சுமை அதிகரித்து விட்டதால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தக் குழு, விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாக பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உழவர்களின் நலன்களைக் காக்க ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா? என்றால் இல்லை என்பது தான் எதார்த்தமான பதில் ஆகும்.
முந்தைய அ.தி.மு.க. அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதியில் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அடுத்த சில காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை அடுத்து பொறுப்பேற்ற தி.மு.க. அரசு தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்தால் பயிர்க் கடனகள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., முந்தைய ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் பாதியைக் கூட செயல்படுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றியது.
தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை; நெல்லுக்கான கொள்முதல் விலையுடன் இணைத்து வழங்கப்படும் ஊக்கத்தொகையை கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 மட்டுமே தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் செய்ய பணமாகவும், நெல்லாகவும் ரூ.275 வரை பறித்துக் கொள்கின்றனர்; கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்று உழவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று வரை அக்கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை.
இதுபோல் உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசிற்கு வரும் தேர்தல் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.