கோவை: இன்று 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நாடு முழுவதும் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய கேபின் க்ரு ஓய்வு நேரத்தை 36-ல் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் உள்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவை திரும்ப பெற்ற நிலையிலும் விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவது தொடர்ந்தது. நேற்று கோவையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் 2 விமானம் உள்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மாற்று பயணம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதற்கிடையே இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வந்த விமான பயணிகள் வெளியில் செல்லும் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பயணி ஒருவரின் சூட்கேட்ஸ் அறை கண்ணாடி கதவில் பட்டு கண்ணாடி கதவு உடைந்தது. இதுகுறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சூட்கேஸ் பட்டதால் கண்ணாடி கதவு உடைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.