புதுடில்லி: டெல்லி பெண்ணை பிரியங்கா காந்தியின் மகன் திருமணம் செய்கிறார். இருவரும் 7 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில் தற்போது திருமணம் நடக்க உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகனான ரைஹான் வதேராவிற்கும், டெல்லியைச் சேர்ந்த அவிவா பேக் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 7 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தநிலையில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ரைஹான்.
அதனை அவிவா ஏற்றுக்கொண்ட நிலையில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாளை ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவிவா பேக் டெல்லியை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். Atelier 11 என்ற புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவிவா பேக் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் வசிக்கின்றனர். அவரது தந்தை இம்ரான் பெக் ஒரு தொழிலதிபர். ரைஹான் வதேராவும் ஒரு புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.