புதுடில்லி: மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, மானிய விநியோகத்தை மேம்படுத்தவும், முறைகேடுகளை கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு கொள்கையாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை (இ-கேஒய்சி) ஒரு தேவையாக அமல்படுத்தியுள்ளது.
ஈரான் போர் காரணமாக இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி. விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுக்க ஓட்டல்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் எல்.பி.ஜி. கியாஸ் தட்டுப்பாடு சூழல் உருவாகி இருக்கும் நிலையில், எல்.பி.ஜி. பெறுவதற்கு ஆதார் மூலம் செய்யப்பட வேண்டிய e-kyc வழிமுறை கட்டாயம் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இந்த நிலையில், எல்.பி.ஜி. நுகர்வோருக்கான கட்டாய பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (இ-கேஒய்சி) குறித்து பரவி வரும் செய்திகள், சமீபத்திய ஒரு பதிவில் இருந்து உருவானது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
மேலும், வைரல் பதிவுகளில் உள்ளது போல் இது ஒரு புதிய உத்தரவு அல்ல என்றும், மாறாக சிறந்த மானிய நிர்வாகத்திற்காக அதிகமான நுகர்வோரை இந்த செயல்முறையை முடிக்க ஊக்குவிக்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, மானிய விநியோகத்தை மேம்படுத்தவும், முறைகேடுகளை கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு கொள்கையாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை (இ-கேஒய்சி) ஒரு தேவையாக அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விநியோக நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மற்றும் ஆதார் ஃபேஸ்ஆர்.டி. (FaceRD) செயலி மூலம் தங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி இந்த சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளலாம் என்று அமைச்சகம் சமீபத்தில் கூறியுள்ளது.
இந்த ஆணை, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை நோக்கியதாகும்.