தஞ்சாவூா்: தஞ்சாவூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் சண்.ராமநாதன் தனது நகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அண்ணாதுரை, பெரியார், கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தஞ்சை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 45-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சண். ராமநாதன். இவர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தஞ்சை மாநகராட்சி மேயராக கடந்த 4-3-2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க வேட்பாளராக சண். ராமநாதன் அறிவிக்கப்பட்டார்.
இதையொட்டி அவர் தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் சண்.ராமநாதன் தனது மேயர் மற்றும் 45-வது வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்தார். இதற்காக தனி தனி ராஜினாமா கடிதங்களை மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் வழங்கினார்.

மேயர் பதவி ராஜினாமா கடிதத்தில் பச்சை நிறத்திலும், கவுன்சிலர் பதவி ராஜினாமா கடிதத்தில் ஊதா நிறத்திலும் கையெழுத்து இட்டிருந்தார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தனது மேயர் பதவியை சண். ராமநாதன் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது மாநகராட்சி நுழைவு வாயிலில் காவலாளியாக பணிபுரிந்த ரவிச்சந்திரன் (58) என்பவர் சண். ராமநாதனை பார்த்ததும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டார். பதிலுக்கு காவலாளி ரவிச்சந்திரனை, சண் ராமநாதன் ஆரத்தழுவி, நான் மேயர் அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் எனக்கு கதவு திறந்து விட்டு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தீர்கள். அதனை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்களை நான் என் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன். உங்களுக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். அனைவருக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார். இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலை, பெரியார் சிலை, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளத்தாளங்கள் முழங்க ஏராளமான கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
டி.கே.ஜி. நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி செந்தில் குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தபோது வேட்பாளருடன் இருந்தனர். வேட்பாளர் சண். ராமநாதன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ நித்யாவிடம் வழங்கினார்.
வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த வேட்பாளர் சண். ராமநாதனுக்கு மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ஆற்றுப்பாலம் கலைஞர் அறிவாலயமான திமுக மத்திய மாவட்ட அலுவலகம் முன்பு சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் இறைவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் து. செல்வம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மகேந்திரன், தேமுதிக சிவனேசன், திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, மேத்தா, நீலகண்டன், கார்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக வேட்பாளர் சண். ராமநாதன் நன்றி கூறினார்.
பின்னர் திறந்த ஜீப்பில் தஞ்சை மாநகராட்சி 15,16,17 வார்டுகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வேட்பாளர் சண்.ராமநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் வண்டிப்பேட்டை, நாலு கால் மண்டபம், அய்யங்கடைத் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.