சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கியப் பொறுப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து, தற்போது ‘அரசு கொறடா’ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர், சபாநாயகராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சபரிநாதன், தவெக அரசின் புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான இவர், இந்த சட்டப்பேரவையின் இளம் உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிநாதன், தமிழக முதல்வர் விஜய்யின் கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் ஆவார். ஒரு சாதாரண ஓட்டுநரின் மகனாக இருந்து, இன்று சட்டமன்றத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கும் ‘அரசு கொறடா’ என்ற உயரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்திற்குள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைப்பது இவரது முதன்மைப் பணியாகும். குறிப்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற முக்கியமான நேரங்களில், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பேரவைக்குள் இருப்பதை உறுதி செய்யவும், அவர்களைக் கட்சியின் முடிவுக்கு ஏற்ப ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கவும் கொறடா முக்கியப் பங்கு வகிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பு இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.