புதுக்கோட்டை: தீவிர ஆலோசனை… தமிழக அரசியல் பயணத்தில் அடுத்த நிலைப்பாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் தொடர் தோல்விக்கு பொதுச்செயலாளர் பழனிசாமியின் அணுகுமுறையே காரணம் எனக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
மேலும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 25 பேரும் வாக்களித்தனர். இதனால் கட்சிக்குள் மோதல் தீவிரமடைந்தது. தவெக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி உட்பட 18 எம்எல்ஏக்கள் பழனிசாமியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். ஆனால் சி.வி.சண்முகம் இதில் பங்கேற்கவில்லை.
இதனால் அவர் அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. ஒருபுறம் அவர் அதிமுகவிலேயே தொடருவார் என்றும் மற்றொரு புறம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் “நீங்கள் கலங்க வேண்டாம், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது, “எனக்கு வாக்களித்த மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதே முதல் கடமை” என்றார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்ற குழுவில் விஜயபாஸ்கர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் விராலிமலை தொகுதி இலுப்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய அவர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவில்தான் தொடர்கிறேன். 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். தொகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை உள்வாங்கியுள்ளேன். தவெகவுக்கு மாறப் போகிறேனா என்ற யூகத்திற்கு இப்போது பதில் அளிக்க முடியாது” என்றார்.