புதுடில்லி: டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், வெளிநாட்டினர் உள்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
நேற்று 3ஆம் தேதி, காலை 9 மணியளவில் தெற்கு டெல்லி தீயணைப்புத் துறைக்கு, மாள்வியா நகரில் லெமன் க்ரீன் என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ விபத்தின் நிலைமையின் தீவிரத்தை அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
20 பேர் உயிரிழப்பு இந்த தீ விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வெளிநாட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையை டெல்லி போலீஸ் உறுதி செய்துள்ளது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், டெல்லி தீ விபத்து மிகுந்த வேதனையை தருவதாகவும், தீ விபத்து தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டதோடு, நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, டெல்லி தீயணைப்புத் துறை தரப்பில் கூறி இருப்பதாவது; டெல்லி மாள்வியா நகர் லெமன் க்ரீன் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் வந்ததும், தீயணைப்பு வாகனங்கள் உள்பட பல நவீன இயந்திரங்களை அனுப்பி வைத்தோம். உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மின்சார கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.