புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள் ஆன்லைன் மதிப்பீட்டு முறையைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண் மற்றும் ஆவணத் தரவுகளை தனியார் நிறுவன சர்வரில் இருந்து தனது கட்டுப்பாட்டிலுள்ள சர்வர்களுக்கு சிபிஎஸ்இ அவசரமாக மாற்றியுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை ஆன்லைன் மூலம் திருத்தும் முறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாணவர்களின் தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக சிபிஎஸ்இ முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மறுமதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டு வந்த ‘கோஎம்ப்ட் எடுடெக்’ நிறுவனத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டிருந்த மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சிபிஎஸ்இ-யின் சொந்த சர்வர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பையும் தரவு மேலாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
எனினும், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் சரிபார்ப்பு பணிகளுக்காக தற்போதுள்ள ‘கோஎம்ப்ட்’ நிறுவனத்தின் டிஜிட்டல் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் தளம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும், இதனால் மாணவர்களின் மறுமதிப்பீட்டு பணிகளில் எந்த தாமதமும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், சிபிஎஸ்இ ஒப்பந்தத்தைப் பெற ‘கோஎம்ப்ட்’ நிறுவனம் சமர்ப்பித்த இணைய பாதுகாப்பு சான்றிதழ்கள் போலியானவை மற்றும் காலாவதியானவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 2025-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து எச்சரிக்கப்பட்டும் கல்வி அமைச்சகம் அலட்சியம் காட்டியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் நிசர்கா அதிகாரி, சிபிஎஸ்இ-யின் டிஜிட்டல் மதிப்பீட்டு தளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த சிபிஎஸ்இ, “சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன. இணையத்தில் பரவிய தகவல்கள் சோதனைத் தரவுகள் கொண்ட பக்கங்கள் மட்டுமே. உண்மையான மதிப்பீட்டு தளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.